திருப்பத்தூர் அருகே மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்ற போது, போலி மருத்துவர் சனிக்கிழமை தப்பி ஓடினார்.
திருப்பத்தூர் சுற்றுப் பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், இதனால் பலர் இறப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் சாந்தி திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், மருத்துவம் படிக்காமல் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடிக்கச் சென்ற போது தப்பி ஓடி விட்டார்.
பின்னர், அங்கிருந்த ஊசி, மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள கண்ணனை தேடி வருகின்றனர்.