வேலூர் மாவட்டத்தில் நூலகத் துறையுடன் இணைந்து வட்டார அளவில் புத்தகக் கண்காட்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வேலூர் நகர அரங்கில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கோபால ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில கருத்தாளர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் க.பூபாலன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன் கண்காட்சி குறித்து தொகுப்புரையாற்றினார்.
இதில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 5 நூலகங்களுக்கு நூல்கள், இளம் விஞ்ஞானிக்கு பாராட்டு, சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:
புத்தகக் கண்காட்சியானது ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமைப்பின் முயற்சி பல்கிப் பெருக வேண்டும். மாவட்டத்தில் நூலகத் துறையுடன் இணைந்து வட்டார அளவில் புத்தகக் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சி மாவட்டம் என்பதால் நீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து சிறு தடுப்பணை அமைக்க திட்டமிட்டு கணியம்பாடி ஒன்றியத்தில் 20 அடி ஆழம் கொண்டதாக 149 உறைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. உறை கிணறுகள் அமைக்கும் பணிகள் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றார்.
மாவட்டப் பொருளாளர் பி.அச்சுதன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பா.சேகர், எ.கலைநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.