முறைகேடாக விற்கப்படும் ஆதிதிராவிடர் இலவச வீட்டு மனைகள்
ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் முறைகேடாக விற்கப்படுவதாகவும், இதை அரசு தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் முறைகேடாக விற்கப்படுவதாகவும், இதை அரசு தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி வருகிறது. மேலும், வீடே இல்லாதவர்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படுவது வழக்கம்.
இதில், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வேறு சமுதாயத்தினருக்கோ, மற்றவர்களுக்கோ விற்பனை செய்ய முடியாது. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்யலாம்.
இந்நிலையில், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலரால் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. சிலர், தங்களுடைய வறுமையின் காரணமாக பட்டாக்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். ஏற்கெனவே வீடு இருப்பதால் இலவச வீட்டு மனை பட்டாவை சிலர் விற்பனை செய்து விடுகின்றனர். மேலும், பட்டாவை அடமானம் வைத்து கடன் வாங்கிவிட்டு, பிறகு அதற்கான பணத்தை செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த நபர் அந்த வீட்டு மனையை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்கிறார்.
இலவச வீட்டு மனையைப் பெற்றவர் அதை மற்றவருக்கு விற்பனை செய்வதாலும், விலை கொடுத்து வாங்குபவரும் விதியை மீறி செயல்படுவதாலும் இத்தகைய முறைகேடுகள் நடைபெறுகின்றன.
அரசு எந்த நோக்கத்துக்காக வழங்குகிறதோ அந்த நோக்கம் நிறைவேறுவது இல்லை. பொருளாதார அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும் மிகவும் பின் தங்கியிருக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை சமுதாயத்தில் நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டி அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
அவற்றை பலர் முறைகேடாக விற்பனை செய்து விடுகின்றனர். இதில், சிலர் ஆதிதிராவிடர்களுக்காக அரசு இலவசமாக வழங்கியது என்பது தெரியாமலும் மனைகளை வாங்கிவிடுகின்றனர். இந்த நிலை தமிழ்நாடு முழுவதுமே உள்ளது.
ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது குறித்து மாநில அளவில் ஒரு ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட பயனாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இலவச வீட்டு மனை உள்ளதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டு மனையை மீட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளிடத்தில் ஒப்படைத்து அவர்களை அந்த வீட்டு மனையைப் பயன்படுத்தச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.