அரக்கோணம் அருகே விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் திங்கள்கிழமை இறந்தார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி மகேஸ்வரி (45). இவரது மகன் தேவராஜ்(21). இந்நிலையில் தேவராஜின் திருமணத்துக்காக அரக்கோணத்தை அடுத்த மோசூரில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழை கொடுக்க தேவராஜ், மகேஸ்வரி ஆகிய இருவரும் பைக்கில் வந்தனர். மோசூர் அருகே வந்த போது, நிலைதடுமாறிய பைக் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த மகேஸ்வரி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.