குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை இணைக்க நடவடிக்கை
குறைவான எண்ணிக்கை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகே உள்ள மற்ற பள்ளிகளோடு இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
குறைவான எண்ணிக்கை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகே உள்ள மற்ற பள்ளிகளோடு இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வியாழக்கிழமை வந்த அவர், பெருமூச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வுக்குப் பிறகு தினமணி செய்தியாளரிடம் குணசேகரன் தெரிவித்ததாவது:
அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரசினர் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 18 கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. பயன்படுத்த இயலாதவை என அறியப்பட்டு அவற்றை இடித்து புதிய கட்டடங்கள் கட்டித் தர ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
இதில், அரக்கோணம் ஒன்றியத்தில் வளர்புரம் காலனி, பெருமூச்சி, பெருங்களத்தூர், புளியமங்கலம் காலனி உள்ளிட்ட பல பள்ளிகள் உள்ளன.
தற்போது மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அப்பள்ளிகளை அருகில் இருக்கும் மற்ற பள்ளிகளோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக ஆசிரியைகள் தங்களது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமத்தில் அங்கன்வாடி மையங்களோடும், கிராம மக்களோடும் இணைந்து பழக வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகள், கழிப்பறை, சமையலறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (அறிவியல்) பிரசாத், அரக்கோணம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரமணன், பெருமூச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் எலிசபெத் ஆகியோர் உடனிருந்தனர்.