மாவட்டத்தில் 34 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்
மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் 34,075 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் 34,075 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.
வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தி, ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நீலோபர் கபில் கலந்துகொண்டு, 143 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:
இந்தக் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 34,075 மாணவர்களுக்கு ரூ. 42 கோடியே 75 லட்சம் மதிப்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. வாணியம்பாடி தொகுதியில் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இந்தக் கல்வியாண்டில் காந்தி நகர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும், 2 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக முழுவதும் 88 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) உள்ளன. இதில், 10, பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்க அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்து கொடுக்கும். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
வாணியம்பாடி நகர அதிமுக செயலாளர் சதாசிவம், ஆலங்காயம் பேரூராட்சிச் செயலாளர் பாண்டியன், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அண்ணாசாமி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ர.சதீஷ்குமார், கே.பி.ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.பி.மணி, பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கோவி.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.