அத்திவரதரை தரிசிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கும்பகோணத்தில் அத்திவரதர் தரிசனத்தில் முதியவர் உயிரிழந்தது பற்றி..
கும்பகோணத்தில் அத்திவரதர் சுவாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அத்தி மரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன் ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013ம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்தநிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 28 ஆம் தேதி மாலை, சுமார் ஒன்றரை அடி உயரத்தில், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையிலிருந்து எடுத்து வரப்பட்டு, தைலக்காப்பு அலங்காரம் செய்து, சிறப்புத் தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
பல்வேறு மாவட்டத்திலிருந்து தினமும் அத்தி வரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம் தத்துவஞ்சேரி பகுதியை சேர்ந்த சசிகுமார் (55) என்ற முதியவர் வரிசையில் நிற்கும்போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.