முகப்பு
வேலூர்

தொடரும் டெங்கு ஒழிப்புப் பணியால் குறைகிறது நோயின் தாக்கம்

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சுமார் ஒரு மாதமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் நோயின் தாக்கம் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை சுமார் ஒரு மாதமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் நோயின் தாக்கம் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசு ஒழிப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசு கண்டறியப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பெரும்பாலானோர் தங்களது பகுதிகளை சுகாதாரமாக வைக்கும் பணியை சிறப்பாக செய்து வருவதால் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.
வேலூர் மாநகராட்சிப் பகுதியைப் பொருத்தமட்டில் வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாக எந்த தேதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அச்சடிக்கப்பட்ட வில்லை (ஸ்டிக்கர்) ஒட்டப்படுகிறது.  
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் தலைமையில் மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுமார், மாநகராட்சிப் பணியாளர்கள் சத்துவாச்சாரி பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புதன்கிழமை ஆய்வு செய்து டெங்கு கொசுப் புழு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதேபோல, பலவன்சாத்துக் குப்பம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் இ.செல்வராஜ், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாநகராட்சியைப் பொருத்தமட்டில் இரண்டாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் இதுவரையில் எவரும் பாதிக்கப்படவில்லை. இதற்கு மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணி தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →