ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல்
அரக்கோணம் பழனிப்பேட்டையில் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் பழனிப்பேட்டையில் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் நகரில் எஸ்.ஆர்.கேட்டில் இருந்து இரட்டைக்கண் வாராவதி வரை இருந்த சாலையின் நடுவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால் அச்சாலை குண்டும், குழியுமாக மாறி இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 6 மாதங்களாக பல புகார்கள் அனுப்பப்பட்ட நிலையிலும் சாலை சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.ஆர்.கேட் ஆட்டோ நிலைய ஓட்டுநர் சங்கத்தினர் தலைவர் ராஜேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், எஸ்.ஆர்.கேட்டில் இருந்து பெருமூச்சி, புதுபேட்டை வழி மேம்பாலம் வரையிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.
தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பாதாள சாக்கடை திட்டச் செயற்பொறியாளர் மணி, நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளர் மதனமுசாபர் ஆகியோர் அங்கு வந்து விரைவில் சாலை சீரமைக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.