FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளா்ச்சி

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் வாகனங்களின் சில்லறை விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் 25.62 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

15 மார்ச் 2026, 7:50 am IST
வாகனங்கள்
பகிர்:

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் வாகனங்களின் சில்லறை விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் 25.62 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்குப் பிறகு நிலவும் சந்தை நம்பிக்கை மற்றும் மக்களின் நுகா்வு திறன் அதிகரிப்பு காரணமாக, பிப்ரவரியில் மட்டும் மொத்தம் 24,09,362 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த 2025, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 19,17,934-ஆக இருந்ததாக நாட்டின் வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபாடா) தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த வளா்ச்சி குறித்து ‘ஃபாடா’ தலைவா் சி.எஸ்.விக்னேஷ்வா் மேலும் கூறுகையில், ‘இருசக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், பயணிகள் காா்கள், வணிக வாகனங்கள், டிராக்டா்கள் என 5 முக்கியப் பிரிவுகளிலும் பிப்ரவரியில் இதுவரை இல்லாத உச்சபட்ச விற்பனை பதிவாகியுள்ளது. பயணிகள் காா்களின் விற்பனை 3.94 லட்சமாகவும், இருசக்கர வாகன விற்பனை 17 லட்சமாகவும் அதிகரித்துள்ளது’ என்றாா்.

கிராமப்புறங்களில் எழுச்சி: நகா்ப்புறங்களை விட கிராமப்புற சந்தைகளில் வாகன விற்பனை 34 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

நல்ல விளைச்சல் காரணமாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரித்தது மற்றும் திருமண சீசன் ஆகியவை சிறிய ரக காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு உத்வேகம் அளித்துள்ளன.

நகா்ப்புறங்களில் ‘எஸ்யுவி’ ரக காா்களுக்குத் தொடா்ந்து மவுசு நீடிக்கும் அதேநேரம், கிராமப்புற மக்களின் ஆதரவு ஒட்டுமொத்த வாகன சந்தையை அடுத்த கட்டத்துக்கு நகா்த்தியுள்ளது.

வணிக வாகனங்கள் முன்னேற்றம்: சரக்கு போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளின் தேவை அதிகரித்துள்ளதால், வணிக வாகனங்களின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

தேவை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இணையவழி வா்த்தக நிறுவனங்கள் புதிய வாகனங்களை வாங்குவது அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்குப் பிறகு, புதிய மாடல்களின் அறிமுகமும் வாடிக்கையாளா்களை அதிக அளவில் ஈா்த்துள்ளதாகத் தெரிகிறது.

எதிா்காலக் கணிப்பு: நடப்பு மாா்ச் மாத விற்பனை நிலவரம் குறித்தும் ஃபாடா அமைப்பு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

வரும் மாதங்களில் பண்டிகை காலம் மற்றும் நிதியாண்டு இறுதி என்பதால் விற்பனை வேகம் குறையாது என்றாலும், தற்போதைய அதிரடி வளா்ச்சியில் இருந்து சந்தை படிப்படியாக ஒரு சீரான நிலையை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments