வேலூரில் உள்ள மரக்கடை ஒன்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
வேலூர், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் மகேந்தர். இவருக்குச் சொந்தமாக ஆற்காடு சாலை சீனிவாசா திரையரங்கம் எதிரே மரக்கடை உள்ளது. இங்கு மரக்கட்டில், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் தயாரித்து, விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மர தளவாடப் பொருள்கள் தயாரிப்பதற்காக பல்வேறு இயந்திரங்களும் உள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8.15 மணியளவில் கடைக்குள் இருந்து அதிகளவில் புகை வெளியேறியுள்ளது. இதையறிந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
எனினும், தீ வேகமாக பரவியது. உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். எனினும், அந்தக் கடையினுள் இருந்த லட்சக்கணக்கான மதிப்புடைய மர தளவாடப் பொருள்களும், இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். எனினும், இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.