பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசினார்.
அரக்கோணத்தை அடுத்த காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றியம், துரைபெரும்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கிராமங்களில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோர் கவனிக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிய கிராம அளவில் கிராம ஊராட்சி செயலர், அங்கன்வாடி பணியாளர், சமூகநலத் துறைப் பொறுப்பாளர்களைக் கொண்ட குழு செயல்படுகிறது.
இவர்களிடம் அல்லது சைல்டு லைன் எனும் 24 மணிநேர செயல்பாடு கொண்ட குழுவுக்கு தகவல் அளித்து பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்வியை அவர்கள் விரும்பும் காலம் வரை பெற்றோர் அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது. நகரப் பகுதிகளில் இருந்து வந்த பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது கிராமப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளது.
இவற்றை முற்றிலும் கிராம மக்கள் தவிர்க்க வேண்டும். கிராமங்களில் தனிநபர் கழிப்பறையை அரசே இலவசமாக கட்டிக்கொடுத்து வருகிறது. கழிப்பறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை கிராம மக்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன், நெமிலி வட்டாட்சியர் வேணுகோபால், காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.