ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சார்பில் மாசி கரக திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் விழா தொடங்கியது. குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், அம்மன் அழைப்பு ஊர்வலமும் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூந்தேர் ஊர்வலம், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து புதன்கிழமை மாசி கரக திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் இருந்து கரக ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை மயில் திருவிழாவும், வெள்ளிக்கிழமை லட்ச தீபம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளன.