வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்
ஜெ.ஜெ. நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை
ஜெ.ஜெ. நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபேட்டை ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சிக்குள்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதி 9-ஆவது வார்டு பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றிய இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் எஸ்.கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.