ஆட்டிறைச்சிக் கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி கூடம் என்ற தலைப்பில் தினமணியில் புகைப்படத்துடன் விரிவான செய்தி புதன்கிழமை வெளியானது. இதையடுத்து சுகாதாரத் துறை அலுவலர் ராஜரத்தினம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆட்டிறைச்சிக் கூடத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அங்கிருந்த கழிவுகளை அகற்ற உத்தரவிட்டனர். மேலும், வியாபாரிகளிடம் காலாவதியான இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது என்று எச்சரித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு வாரகாலத்துக்குள் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இங்குள்ள ஒரு அறையில் மக்கும் குப்பைகளில் இருந்தும், சாணத்திலிருந்தும் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும். விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் ஆடு அறுப்பது தெரியவந்தால் கடையை பூட்டி "சீல்' வைக்கப்படும் என்றனர்.