முகப்பு
வேலூர்

பிளாஸ்டிக் மாசுவை முறியடிக்கும் துணிப்பைகள் வெளியீடு

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளை சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வெங்கடாசலம் வெளியிட்டார்.

Updated On : 14 மே, 2018 at 11:49 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளை சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வெங்கடாசலம் வெளியிட்டார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய பசுமைப்படை சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பிளாஸ்டிக் மாசு ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் இந்த பிளாஸ்டிக் மாசு ஒழிக்கும் நடவடிக்கை குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அ.வ.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர், ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேசியப்பசுமைப் படை மாணவர்கள் பள்ளிகளில் மரம் வளர்த்தல், வன வளம் குறித்த நாடகங்கள் கண்காட்சிகள் நடத்துதல், பள்ளி, சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்தல், கலை நிகழ்ச்சி, தெரு நாடகங்கள் மூலம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து பள்ளிகளிலும், தங்களது ஊர்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், இளம் சமுதாய மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளையும் அவர் வெளியிட அதை திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான சீ.முரளிதர் பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.