முகப்பு
வேலூர்

ஆம்பூர் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஆம்பூர் அருகே ஏரியில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

Updated On : 21 மே, 2018 at 11:43 PM
பகிர்:

ஆம்பூர் அருகே ஏரியில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
ஆம்பூர் அருகே பெரியவரிகத்தில் 320 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருந்தது. இந்த ஏரி அருகே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். மேய்சலுக்கு பின் ஆடு, மாடுகள் அந்த ஏரியில் உள்ள தண்ணீரை குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் ஏரிப்பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகளின் தோல் கழிவுபொருள்கள் அங்கு கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆட்டு முடிகளை அங்கு மலைபோல் கொட்டி வைத்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக தோல் கழிவுப் பொருள்களில் இருந்து வெளியேறிய நீர் ஏரியில் கலந்துள்ளது. தோல் கழிவுப்பொருள்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர் ஏரியில் கலந்ததால் ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஏரியில் தோல் கழிவுபொருள்களை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் அப்பகுதியில் தண்ணீர் அருந்திய ஆடுகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஏரியில் கலந்த தோல் கழிவுநீரால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஏரியில் தோல்கழிவுப் பொருள்களை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஏரியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.