வேலூர் சிறையில் வார்டனை தாக்கிய பெண் கைதி: போலீஸார் விசாரணை
வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனை பெண் கைது ஒருவர் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனை பெண் கைது ஒருவர் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், மத்திய பெண்கள் சிறையில் கொலை, திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுமார் 350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மனநல மருத்துவர் செல்வக்குமார், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தார்.
அப்போது, சிறை சமையலறையில் ஓசூரைச் சேர்ந்த கொலைக் கைதியான வித்யா(30) இருந்தார். அவரை சிறை வார்டன் சுதா மருத்துவப் பரிசோதனைக்கு வரும்படி அழைத்தாராம். ஆனால், கைதி வித்யா மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
அப்போது, சுதாவுக்கும், கைதி வித்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வித்யா, சிறை வார்டன் சுதாவை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினரும், போலீஸாரும் வார்டன் சுதாவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.