நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்மொழி சேவைகளை அறிமுகம் செய்துள்ள பெங்களூரு காவல்துறை குறித்து...
பெங்களூரு: நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்மொழி சேவைகளை பெங்களூரு காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் முதல்முறையாக பெங்களூருவில் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான பன்மொழி நம்ம 112 என்ற திட்ட அவசர சேவைகளை பெங்களூரு காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தொடக்கிவைத்தாா்.
இது குறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது:
Advertisement
பெங்களூரு நகரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது; உலகின் பல்வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள் வாழும் மாநகரமாக பெங்களூரு உள்ளது. ஒருசில நேரங்களில் அவசர தேவைகளுக்கு காவல்துறையை பொதுமக்கள் தொடா்புகொள்ளும்போது, மொழி பெரும் தடையாக இருந்துவிடுகிறது.
இதனால், உடனடி தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த குறையை போக்கும் வகையில், காவல்துறை வழங்கும் 112 அவசர சேவைகளை பன்மொழி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம்.
இதன்மூலம், பல்வேறு மொழிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களை மெய்நிகா் நேரத்தில் கன்னடம் உள்ளிட்ட விரும்பிய மொழியில் காவல்துறையினரால் புரிந்துகொண்டு, உடனடியாக உதவி செய்ய முடியும்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பெங்களூரில் வசிக்கும் மாணவா்கள், தொழில்முனைவோா், அதிகாரிகள், பணியாளா்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.
112 அவசர சேவைகளை பன்மொழியில் வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் கைகொடுத்திருக்கிறது. இதுபோன்ற சேவை, இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூருவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம்ம 112 என்ற இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்த புதிய முயற்சி, 10-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை ஆதரிப்பதன் மூலம் மொழித் தடைகளை நீக்குகிறது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக பெங்காலி, மலையாளம், குஜராத்தி, ஒடிஸா, மணிப்பூரி, அசாமி, காஷ்மீரி, நேபாளி ஆகிய இந்திய மொழிகளுடனும் ஸ்பேனிஷ், பிரெஞ்ச் மற்றும் அரபிக் மொழிகளில் வழங்கப்படுகின்றன. காவல்துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே கன்னடம், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் தெரிந்தவர்கள்.
அடுத்தக்கட்டத்தில் மேலும் பலமொழிகள் சோ்க்கப்படும். எந்த மொழியை பின்புலமாக கொண்டவா்களாக இருந்தாலும், பொதுமக்களின் அவசர தேவைகளை அறிந்து சேவை ஆற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கமாகும்.
தற்போது, 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மக்களுடன் உரையாடும் நாட்டின் முதல் காவல்துறைப் பிரிவாக நாம் திகழ்கிறோம் என்றும், பாதுகாப்பான பெங்களூருவை உறுதி செய்ய, புதிய தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங் பேசுகையில், பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளைப் பேசவும் புரிந்துகொள்ளவும் தெரிந்தவர்கள். ஒருசில நேரங்களில் அவசர தேவைகளுக்கு காவல்துறையை பொதுமக்கள் தொடா்கொண்டு இந்திய அல்லது வெளிநாட்டு மொழிகளில் பேசும்போதுதான், மொழி பெரும் தடையாக இருந்துவிடுகிறது. எனவே, அவசர உதவி எண்ணை அழைக்கும் மக்கள் பொதுவாக எந்தெந்த மொழிகளில் பேசுகிறார்கள் என்பது குறித்த தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினோம் என்றார்.
இந்தத் தரவு சேகரிப்புப் பணி கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கியது என்று காவல்துறை இணை ஆணையர் (நிர்வாகம்) குல்தீப் குமார் ஜெயின் தெரிவித்தார். "காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் நாள்தோறும் சுமார் 8,000 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன; அவற்றில் சுமார் 2,000 அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த 2,000 அழைப்புகளில், 100 முதல் 200 பேர் பிற மொழிகளில் பேசுகின்றனர். இவர்களில் மலையாளம் பேசுவோரின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக உள்ளது. வெளிநாட்டு மொழிகளைப் பொறுத்தவரை, ஸ்பானிஷ், பிரெஞ்சு, நேபாளி மற்றும் அரபிக் ஆகிய மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.