அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது
திருப்பத்தூரில் அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூரில் அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (43). இவர், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ஆம் தேதி திருச்சி சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை, போலீஸார் நகைக் கடை பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் நகைக் கடையில் நகைளை விற்க வந்தார். போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், திருப்பத்தூரை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைத் சேர்ந்த முத்துராமன் (45) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும், வேலாயுதம் வீட்டில் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்து 13 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து, முத்துராமனைக் கைது செய்தனர்.