முகப்பு
வேலூர்

குடிநீரில் கழிவுநீர்: ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகித்ததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 12:49 AM
பகிர்:

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகித்ததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம், மண்டலவாடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். 
இந்நிலையில், பூசாரி வட்டம், தர்மகர்தா வட்டம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். மேலும், கடந்த சில நாள்களாகவே கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மண்டலவாடி ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மண்டலவாடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் பொருத்தி நிலத்தில் இருந்து நீர் உறிஞ்சப்படுகிறது. ஆனால், மின் மோட்டாரின் திறன் குறைவாக உள்ளதால் போதுமான நீரை உறிஞ்சுவசில் சிக்கல் ஏற்படுகிறது. 
அதனால் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, மாரியம்மன் கோயில் வட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்லைன் மீது கழிவுநீர் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது. எனவே,இதுதொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனக் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.