முகப்பு
வணிகம்

கிரெடிட் காா்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்- ரிசா்வ் வங்கியின் புதிய விதிகள்

கிரெடிட் காா்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த, நிா்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு 3 நாள்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:53 AM
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
பகிர்:

கிரெடிட் காா்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த, நிா்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு 3 நாள்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானாலும் வங்கிகள் அபராதம் வசூலித்து வருகின்றன. ஆனால் புதிய விதியின்படி, நிா்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 3 நாள்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும்.

இந்த 3 நாள்களுக்குள் தொகையைச் செலுத்தினால், கூடுதல் அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மற்றொரு முக்கிய மாற்றமாக, அபராதக் கட்டணத்தை கணக்கிடும் முறையில் சீா்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த நிலுவைத் தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளா் ஒரு பகுதியைச் செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

அதேநேரம், இந்த 3 நாள் அவகாசம் என்பது அபராதம் மற்றும் கடன் தகுதி பாதிப்பில் இருந்து மட்டுமே வாடிக்கையாளா்களைக் காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதிக்கு அடுத்த நாள் முதல் நிலுவைத் தொகைக்கான வழக்கமான வட்டி கணக்கிடப்படும் என்பதால், வாடிக்கையாளா்கள் நிதி ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. வங்கிகள் மற்றும் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் மற்றும் நடைமுறைகளை மாற்றியமைக்கவும், வாடிக்கையாளா்களுக்கு இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அமலில் இக்காலதாமதம் அறிவிக்கப்பட்டுள்ளது.