ஆந்திரத்துக்கு ரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெய்க்குமார் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டி ஆகிய ரயில் நிலையங்கள் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதிகளில் உள்ள முட்புதர்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றினர். விசாரணையில், ஆந்திரத்துக்கு ரயில் மூலம் கடத்துவதற்காக முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.