திருப்பத்தூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த மிட்டூர் அருகே உள்ள ரெட்டி வலசை பகுதியைச் சேர்ந்தவர் சுதா (32). இவர், நாச்சியார் குப்பம் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷுக்கும் (30) மூன்று ஆண்டு காலமாக தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது. அவர்கள், அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாகக்
கூறப்படுகிறது.
இதையடுத்து, சுதாவை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற சதீஷ், அங்கு சுதாவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, ஆற்றுப் பகுதியிலேயே குழிதோண்டி சடலத்தை புதைத்துள்ளார்.
இந்நிலையில், குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் சதீஷ் திங்கள்கிழமை சரண் அடைந்தார். அப்போது சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், சதீஷை அழைத்துக்கொண்டு, ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு புதைக்கப்பட்டிருந்த சுதாவின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, சதீஷை கைது செய்தனர்.