முகப்பு
வேலூர்

வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்ற சிக்னல் சோதனை

விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்ற சிக்னல் சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. ஐரோப்பிய நிபுண

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:


விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்ற சிக்னல் சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. ஐரோப்பிய நிபுணர் குழுவும், டில்லி விமான நிலைய அதிகாரிகள் குழுவும் இணைந்து இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டன.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், வேலூர் அருகேயுள்ள அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கெனவே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 760 மீட்டர் நீளமுடைய ஓடுதளத்தை 800 மீட்டராக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலப்பரப்புக்கு இணையாக ஓடுதளத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், விமான முனைய கட்டடப் பணிகளும் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்துக்கான தகவல் பரிமாற்ற சிக்னல் இயந்திரம் கொல்கத்தாவிலிருந்து வேலூர் விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இதையடுத்து, வேலூர் விமான நிலையத்தில் அதை நிறுவும் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் பரிமாற்ற சிக்னல் சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட நிபுணர் குழுவும், தில்லியைச் சேர்ந்த விமான அதிகாரிகளும் இந்த தகவல் பரிமாற்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தின் சிக்னல் கட்டுப்பாட்டு அறை, விமானம், தலைமை நிலைய தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த தகவல் தொழில்நுட்ப சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் இணைப்பின் வழியாக தகவல் பரிமாற்றம் இடையூறு இல்லாமல் கிடைக்கிறதா என்பது குறித்தும், அவற்றை பராமரிப்பது குறித்தும் இந்த ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், தற்போது ஓடுதளம் அமைக்கும் பணியில் 4 அடுக்குகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இரு அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், விமான முனையம் கட்டும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து, பாதுகாப்புத் தடையின்மைச் சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறப்பட்டு, வரும் ஆண்டு, ஜூன் முதல் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments