முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு 10 நாள்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? அதற்கான நேரம் முடிவடையவுள்ளது. 48 மணி நேரத்தில் நரகத்தைச் சந்திக்கவுள்ளனர். கடவுளுக்கே மகிமை” என்று ஈரானை எச்சரித்திருந்தார்.
Advertisement
ஈரானில் உள்ள அணுமின் நிலையம், பெட்ரோகெமிக்கல் மையம், வர்த்தக முனையம் மற்றும் சிமெண்ட் ஆலை போன்ற முக்கிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவரும் நிலையில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இன்று ஈரானை மிரட்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், “வருகின்ற செவ்வாய் அன்று ஈரானின் எரிசக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும். அதுபோன்ற தாக்குதல்களை இனி பார்க்க முடியாது. முட்டாள்களே! பாழாய்போன அந்த நீரிணையை திறந்து விடுங்கள். இல்லையென்றால் நரகத்தில் வாழவேண்டியிருக்கும். மேற்கொண்டு வேடிக்கை பாருங்கள். அல்லாஹ்வுக்கே மகிமை” என்று மிரட்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்று டிரம்ப் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “டிரம்பின் அச்சுறுத்தல் என்பது ஒரு பயனற்ற, பதற்றமான, நிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.