போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!
போர்நிறுத்ததை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகும் 2 கொள்கலன் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து...
ஈரானுக்கு எதிரான அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.23) அறிவித்தும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் 2 கொள்கலன் கப்பல்களைத் தாக்கியுள்ளது.
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், முடிவடையவிருந்த போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே இத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. டிரம்பின் இந்தப் போர்நிறுத்த நீட்டிப்பு குறித்து ஈரான் தரப்பிலிருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ செய்தியும் இதுவரை அளிக்கப்படவில்லை.
முதற்கட்டமாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (ஏப்.23) ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கப்பல் சேதமடைந்ததால் பதற்றம் காணப்பட்டது.
Advertisement
இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் கடந்து செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில், மற்றொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்தது.
ஒரு கொள்கலன் கப்பலின் மாஸ்டர், தங்கள் கப்பலை ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் ஒரு துப்பாக்கிப் படகு நெருங்கியதாகவும், பின்னர் அது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனால் கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஈரான் இந்தத் தாக்குதலை உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், ஈரானிய ஆயுதப் படைகளின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்த பின்னரே, பாதுகாப்புப் படை அந்தக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.