நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெங்களூரு கோப்பாலா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (65). இவர், தனது மனைவி நளினி (64), உறவினர்கள் கிருஷ்ணகுமாரி (50), வெங்கடலட்சுமி (55), வனிதா (24), பார்வதி (48) ஆகியோருடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு புதன்கிழமை காலை பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின்பக்கம் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நிகழ்விடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்ற 5 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் அங்கு சென்று மோகன்ராஜின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.