குடியாத்தம் அருகே கிணற்றில் மிதந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை தீயணைப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெட்டேரி கிராமத்தில் உள்ள குப்பம்மாளின் விவசாயக் கிணற்றில் மூட்டை மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புப் படையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் கிணற்றில் இறங்கி மூட்டையை மீட்டு வந்து அதைத் திறந்து பார்த்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.