முகப்பு
வேலூர்

நளினி, முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்: சலுகைகள் திடீர் ரத்து

வேலூர் மத்தியச் சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 7:07 am IST
பகிர்:

வேலூர் மத்தியச் சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 
27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் ஏற்க வலியுறுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன் கடந்த 2-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பதை அவரது வழக்குரைஞரை புகழேந்தி அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில்,  வேலூர் பெண்கள் சிறையில் உள்ள முருகனின் மனைவி நளினி சனிக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறைத் துறை தகவல்படி முருகன் 6-ஆவது நாளாகவும், நளினி 
4-ஆவது நாளாகவும் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, காவல் கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோர் முருகன், நளினி ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 
எனினும் அவர்கள் இருவரும் சிறைத் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் இருவரின் உடல்நிலை குறித்தும் தொடர்ந்து சிறைத் துறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். 
சிறையில் தீவிர சிகிச்சைப் பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
உண்ணாவிரதத்தை அவர்கள் இருவரும் கைவிட்டால் மட்டுமே மீண்டும் சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.