கோடைக்கு முன்பாகவே அதிகரித்து வரும் வெயிலால் வேலூர் மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடைக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவில் வெயில் நிலவும் மாவட்டமாக வேலூர் உள்ளது. இம்மாவட்டத்தில் கோடைகாலத்தில் அதிகப்படியாக 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாவது வழக்கம். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 110 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகள் பொய்த்துவிட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் கூட தண்ணீர் பஞ்சம் தற்போதே தொடங்கி விட்டது.
இதனிடையே, கோடைக்கு முன்பாகவே கடந்த சில நாள்களாக வேலூர் மாவட்டத்தில் வெயில் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி அதிகபட்சம் 91.6 டிகிரியாக இருந்த வெயில் தாக்கம், சனிக்கிழமை 95.9 டிகிரியாகவும், ஞாயிற்றுக்கிழமை 97.2 டிகிரியாகவும் இருந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை பகலில் 95.09 டிகிரி வெப்பம் நிலவியதாக மாவட்ட நிர்வாகம் பதிவு செய்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இப்போதே வேலூர் மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதால், வெயிலை சமாளிக்க இப்போதே மக்கள் தயாராகி வருகின்றனர்.