முகப்பு
வேலூர்

தமிழ்நாட்டை ஆள்வது எங்கள் இலக்கு அல்ல

தமிழ்நாட்டை ஆள்வது எங்களின் இலக்கு அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:12 am IST
பகிர்:

தமிழ்நாட்டை ஆள்வது எங்களின் இலக்கு அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 
ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:
பாலாற்றில்  தண்ணீர் மட்டுமல்ல; தற்போது மணலும் இல்லை. தோல் கழிவுகளால் பாலாறு மாசுபட்டுள்ளது. இதற்காக  பல போராட்டங்களை பாமக நடத்தி வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டில் "பாலாற்றைக் காப்போம்' என்று வாணியம்பாடியில் இருந்து  வாலாஜா வரை சைக்கிள் பேரணி நடத்தினோம். நாம்  நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். அதற்கு மக்கள்  விழிப்போடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மழை போதுமான அளவு பெய்கிறது. ஆனால் மழைநீரைத் தேக்கி வைக்கக் கூடிய கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அதிக நகரங்களைக் கொண்ட மாநிலம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயமும் இல்லை; விவசாயிகளுக்கு வாழ்வாதாரமும் இல்லை.
தமிழ்நாட்டில் நீடித்த வளர்ச்சி வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாகும். தற்போது ஆற்காட்டில் கிச்சிலி அரிசி இல்லை. அது முடிந்து விட்டது. பாரம்பரியத்தை இழந்துள்ளோம். நாட்டில் நீர்வளம், நிலவளம், விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக-வின் நோக்கம். எங்களுடைய இலக்கு தமிழ்நாட்டை ஆள்வது கிடையாது. தமிழகத்தை முன்னேற்றுவதுதான் இலக்காகும். பாமக ஆட்சிக்கு வந்தால் சீக்கிரமாக முன்னேற்றலாம். பல திட்டங்களைக் கொண்டுவருவோம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள், மாற்றங்களை உருவாக்குவோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.