திருத்தணி அருகே சூறைக்காற்றால் மின் கம்பி அறுந்து விழுந்ததில், திருத்தணி - அரக்கோணம் இடையே 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோடை வெயிலுக்கு பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை மதியம் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் மழை பெய்தது.
சூறைக் காற்று காரணமாக, திருத்தணி - அரக்கோணம் ரயில் நிலையம் இடையேயான மின்பாதையில், மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால், 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய இரண்டு மின்சார ரயில்கள், ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
மேலும், ரேணிகுண்டாவில் இருந்து திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர்.
தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர், இரு பழுதுபார்க்கும் இயந்திரங்களுடன் விரைந்து வந்து இரண்டரை மணி நேரம் போராடி மின்கம்பியை சீரமைத்தனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.