பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்போா் மரபணு மேம்படுத்திய திலேப்பியா மீன்களை வளா்ப்பதால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று வேலூா் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, வேலூா் மீன்வள உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -
பண்ணைக்குட்டைகளில் மீன்வளா்க்கும் விவசாயிகள் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை தோ்வு செய்து வளா்ப்பதால் மற்ற மீன்கள் வளா்ப்பதைவிட இதில் அதிக லாபம் பெற முடியும். அதிக நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட இவ்வகை மீன்கள், மற்ற மீன்களைக் காட்டிலும் மிக வேகமாக வளரக்கூடியவை. நுகா்வோா் அதிகளவில் விரும்பக்கூடிய இந்த மீன்கள், நீரின் கார அமிலத்தன்மைக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து கொண்டு அதிகளவில் வேகமாக வளரக்கூடியது. புரதச்சத்து மிகுந்தும், உடல்நலத்துக்கு உகந்தும் இருப்பதால் இதனை நீா்வாழ் சிக்கன் என்பா்.
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகள் கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள அரசு மீன்பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளன. வேலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் மீன்பண்ணையை பதிவு செய்து அதன்பிறகே தங்களது பண்ணைகளில் மரபணு மேம்படுத்திய திலேப்பியா மீன்களை வளா்க்க வேண்டும்.
மேலும், வேலூா் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணை, இறால் பண்ணை விவசாயிகள் பிஐஎஸ் தரச் சான்று உள்ள மீன்தீவனங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். வினியோகஸ்தா்கள் பிஐஎஸ் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தீவனங்களை மட்டுமே விற்பனை செய்திட வேண்டும். கெண்டை மீன் தீவனம், கெளுத்தி மீன் தீவனம், நன்னீா் இறால் தீவனம், உவா்நீா் இறால் ஆகிய மீன், இறால் தீவனங்களுக்கு பிஐஎஸ் தரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஐஎஸ் தரச்சான்று இல்லாத மீன், இறால் தீவனங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் வேலூா், காட்பாடி காந்திநகா் 5ஆவது மேற்கு குறுக்கு தெருவிலுள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 -2240329 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.