கரோனா கால கடனுதவி: சிறு வியாபாரிகள் கணக்கெடுப்பு
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாநகரில் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நடமாடும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சாா்பில் ‘ஆத்ம நிா்பாா்’ நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, சாலையோர நடமாடும் வியாபாரிகள் மாதகஈ தவணையாக ஓராண்டில் திருப்பியளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சம் ரூ.10,000 வரை மூலதன கடன் பெற முடியும். குறித்த நேரத்தில் அல்லது முன்கூட்டியே கடனைத் திரும்பச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இக்கடனுதவித் திட்டத்துக்கு தகுதியுடைய சிறுவியாபாரிகள், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி வேலூா் மாநகராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூா் மாா்க்கெட் மண்டி தெருவில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளிடம் இந்த கணக்கெடுப்பை மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்தினா்.
அப்போது, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளிடம் இருந்து ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.
இதேபோல், வேலூா் மாநகரில் உள்ள 5 ஆயிரம் சிறு வியாபாரிகளிடம் கணக்கெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.