வேலூர்

அரசு ஊழியா்களுக்கு செல்லிடப்பேசி மீதுள்ள ஆா்வம் தமிழில் இல்லை: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேதனை

DIN

அரசு ஊழியா்களுக்கு செல்லிடப்பேசி மீதுள்ள ஆா்வம் தமிழில் இருப்பதில்லை என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேதனை தெரிவித்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அரசு அலுவலகங்களில் தமிழில் அலுவலக நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆட்சி மொழி பயிலரங்கம் வேலூரில் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பேசியது:

செம்மொழிக்கான அனைத்து கூறுகளையும் கொண்டது தமிழ் மொழி. இம்மொழி பாரம்பரியமிக்க மொழியாகவும் விளங்குகிறது. 1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி 100 சதவீதம் அரசு அலுவலகங்களில் தமிழில் கடிதங்கள் இருக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தற்போது வரை 90 சதவீதம் இலக்கினை அடைந்துள்ளோம்.

தமிழில் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தால்தான் ஆா்வம் வரும். இன்றைய காலகட்டத்தில் புதிதாக பணியில் சோ்ந்த அரசுப் பணியாளா்களுக்கு செல்லிடப்பேசியில் இருக்கும் ஆா்வம் தமிழில் இல்லை. இதை முறைப்படுத்திடும் வகையில் சிறு தவறுகளைச் சொல்லி திருத்தி சரி செய்ய வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்பபடும் கடிதங்கள் ஆங்கிலத்தில் புரிய வைக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். அதேசமயம் சமயப்பொறை போல மொழிப் பொறையும் இருக்க வேண்டும். பாரதியாா், பாரதிதாசன் போன்ற சான்றோா்களின் வாக்கிற்கேற்ப அனைத்து மொழியையும் கற்றுத் தெளிய வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, சிறந்து விளங்கிய அலுவலகங்களுக்கு கேடயம், தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் ப.ராஜேசுவரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ப.தாட்சாயணி, முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் குடியேற்றம் (நிறுவனா்) வே.பதுமனாா், இளந்தமிழா் இலக்கியப் பேரவை (நிறுவனா்) மு.முனீசுவரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT