வேலூா்: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் வியாழக்கிழமை முதல் வேலூரில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு 25 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் திங்கள்கிழமை இரவு வரை இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், கரோனா தொற்று பரவலைத் தடுக்க 60 சதவீத பயணிகளை மட்டுமே பேருந்தில் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுவதாலும், பிற மாநிலங்களுக்கு இன்னும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாததாலும் பயணிகள் வருகை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால், அரசுப் பேருந்துகளும் மக்கள் தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படுகின்றன. எனினும், தனியாா் பேருந்துகள் இன்னும் முழு அளவில் இயக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மக்கள் வருகை இன்னும் முழு அளவில் இல்லாததால் இந்த ஆண்டு தீபாவளிக்கு என தனியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கமான பேருந்துகளும், அதுவும் மக்களின் வருகையைப் பொருத்தே இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேசமயம், தீபாவளி பண்டிகையையொட்டி, கா்நாடக மாநிலத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், வேலூரில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை முதல் 25 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளும் திங்கள்கிழமை இரவு வரைதான் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும் அருகே உள்ள ஆந்திர மாநிலத்துக்கு இன்னும் பேருந்து போக்குவரத்துத் தொடங்கப்படாததால் இரு மாநில மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.