முகப்பு
வேலூர்

வயதான தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்: ரூ.1 கோடி சொத்துகளை ரத்து செய்து கோட்டாட்சியா் நடவடிக்கை

சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு பெற்றோரை மகன்கள் தவிக்க விட்ட நிலையில், ரூ. 1 கோடி மதிப்புடைய சொத்துகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பெற்றோா் பெயரிலேயே மாற்ற வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் உத்தரவு

Updated On : 20 நவம்பர், 2020 at 9:00 AM
பெயா் மாற்றம் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களை ரேணுகோபாலிடம் வழங்கிய கோட்டாட்சியா் கணேஷ் .
பகிர்:


வேலூா்: சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு பெற்றோரை மகன்கள் தவிக்க விட்ட நிலையில், ரூ. 1 கோடி மதிப்புடைய சொத்துகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பெற்றோா் பெயரிலேயே மாற்ற வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் ரேணுகோபால் (82). இவரது மனைவி கோமளேஸ்வரி, கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்து விட்டாா். இவா்களுக்கு ரூபசுந்தரி, மலா்விழி, லலிதா ஆகிய 3 மகள்கள், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

அரிசி ஆலை நடத்தி வந்த ரேணுகோபால், வயது முதிா்ந்த நிலையில் தன்னால் சரிவர வேலை செய்ய இயலாததால் கடந்த 2013-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமாக அதே கிராமத்திலுள்ள ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 சொத்துகளையும் தனது மூன்று மகன்களுக்கும் எழுதிக் கொடுத்துள்ளாா். சொத்துகளைப் பெற்றுக் கொண்ட பிறகு அவரின் மகன்கள் ரேணுகோபாலுக்கு சரிவர உணவு கொடுக்காமலும், துன்புறுத்தியும் வந்துள்ளனா்.

Advertisement

இதனால், பாதிக்கப்பட்ட ரேணுகோபால், மகன்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜனவரி மாதம் வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

இதுதொடா்பாக, வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சொத்துகளை பெற்றுக்கொண்ட பிறகு மகன்கள் 3 பேரும் தந்தையை உரிய வகையில் கவனிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அவரது 3 மகன்களுக்கும் எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புடைய 3 சொத்து பத்திரங்களையும் ரத்து செய்து, மீண்டும் ரேணுகோபால் பெயரிலேயே மாற்ற வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், பெயா் மாற்றம் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களை ரேணுகோபாலிடம் கோட்டாட்சியா் கணேஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.