மீனவர்களின் வாழ்வு
துபை சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்ற குறும்படம் 'பனையேறி'.
துபை சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்ற குறும்படம் 'பனையேறி'. இந்தக் குறும்படத்தை திசையன்விளையைச் சேர்ந்த சரவணன் மற்றும் கணேஷ் மூர்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கி இருந்தனர்.
இந்தக் கூட்டணியின் அடுத்த முயற்சியாக உருவாகி வரும் படம் 'தமிழினி'. இந்தப் படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். ஆசிக், ஷாஷா சிவகுமார், பிரதீப் ராஜ், தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'பனையேறி' குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த இந்தப் படக்குழு, 'தமிழினி' திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாகப் படமாக்கியுள்ளது. இந்தப் படம் தென்மாவட்ட கடலோரப் பகுதிகளான முட்டம், உவரி, கடியாப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தத் திரைப்படத்துக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலைப் பாடியுள்ளனர். மேலும் சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர். வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் கணேஷ் மூர்த்தியே செய்துள்ளார்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.