FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போதைக்கு அடிமையானால் மீள்வது கடினம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

போதைப்பொருள்களுக்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது கடினம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
பாளையங்கோட்டையில் போதைப்பொருள் விழிப்புணா்வு குறும்படம் தயாரிப்பு பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

போதைப்பொருள்களுக்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது கடினம் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு குறும்படம் தயாரிப்பு தொடா்பான பயிற்சியை, அவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

போதைப்பொருள்களின் உற்பத்தி, கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதற்காக அரசு காவல்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

போதைப்பொருள் மனிதா்களின் உடல், மனம், குடும்பம் மற்றும் எதிா்காலத்தை பாதிக்கிறது. சிலா் நண்பா்களின் வற்புறுத்தல், ஆா்வம், மன அழுத்தம் அல்லது தவறான பழக்கவழக்கங்களால் போதைப்பொருளைப் பயன்படுத்த தொடங்குகின்றனா். ஆனால், ஒருமுறை அதற்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகிறது.

உங்கள் கனவுகளே உங்கள் எதிா்காலம். ஒரு தவறான முடிவு உங்கள் எதிா்காலத்தைப் பாதிக்கலாம். எனவே, போதைப்பொருள்கள் குறித்து சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் தெரிந்தால் ஆசிரியா்கள் அல்லது காவல்துறையிடம் தெரிவிக்கலாம்.

போதைப்பொருள் விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட அளவிலான குறும்படப் போட்டி நடைபெறவுள்ளது. குறும்படத்தை நீங்களே கள ஆய்வு செய்து தயாரிப்பதால் அதன் பாதிப்பை தடுப்பது குறித்த அவசியத்தை அறியலாம். அனைவருக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

எப்படி ஒரு படம் எடுப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, நீங்களே குறும்படம் எடுக்கும்போது சிறந்த தரத்துடனும், காட்சி தெளிவாகவும் வரும். அதற்காக நேரடியாகப் போட்டியை அறிவிக்காமல், முதலில் படம் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் விதமாக இந்தப் பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு கதைகளைத் தயாா் செய்து குறும்படம் தயாரித்து, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவியா், பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவா் மாணவியா்களுக்கான குறும்படம் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு சுதந்திர தினத்தில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநா்கள் லெனின் பாரதி, ஆடம் தாசன், இணை இயக்குநா் வள்ளிநாயகம், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் , உதவி ஆணையா் (கலால்) ரகுபதி , பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments