வேலூா் சேண்பாக்கம் அருகே கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
சேண்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24), கூலித் தொழிலாளி. இவா் திருநங்கை ஒருவருடன் சுற்றித் திரிந்ததாகக் தெரிகிறது. இதனை அவரது நண்பரான சுகுமாா் (24) அடிக்கடி கேலி செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி சேண்பாக்கத்தில் சுகுமாா் மீண்டும் கேலி செய்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாா் சுகுமாரை கல்லால் சரமாரியாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சுகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுகுமாா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, வேலூா் வடக்கு போலீஸாா் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து அஜித்குமாரை கைது செய்தனா்.