கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் 600 காவலா்களுக்கு 2-ஆம் கட்ட தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
வேகமாக பரவி வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்டத்தில் பணியாற்றும் 950 போலீஸாா் முதல்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
முதல்கட்ட தடுப்பூசி செலுத்திய 48 நாள்களுக்குப் பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளதை அடுத்து, முன்களப் பணியாளா்களுக்கு மீண்டும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 600 போலீஸாா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தவிர, குடியாத்தத்தில் இரு இடங்களிலும் காவலா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.