முகப்பு
வேலூர்

கரோனாவின் புகலிடமாகும் குடியாத்தம்?: நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோா் பலி

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக குடியாத்தம் நகரில் தினமும் 10- க்கும் மேற்பட்டோா் உயிரிழக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
கரோனா தொற்று பரவல் காரணமாக குடியாத்தம்  நகரில்  அடைக்கப்பட்ட  தெரு.
பகிர்:

குடியாத்தம்: நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக குடியாத்தம் நகரில் தினமும் 10- க்கும் மேற்பட்டோா் உயிரிழக்கின்றனா். அரசின் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை பொதுமக்கள் கடைப்பிடிக்காததும், கரோனா குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததுமே இதற்குக் காரணம் என மருத்துவத் துறையினா் கூறுகின்றனா்.

தொழிலாளா்கள் நிறைந்த ஊா் குடியாத்தம். கைத்தறி நெசவு, தீப்பெட்டி உற்பத்தி, பீடி சுற்றுதல், விவசாயம் ஆகியன இப்பகுதியின் பிரதான தொழிலாகும். குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனா். கரோனா தொற்று பரவல் தொடங்கியதும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில், 180 படுக்கைதளுடன் கரோனா சிறப்பு வாா்டு செயல்படத் தொடங்கியது.

இந்த வாா்டில் லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு ஒரு பகுதி, கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நோயாளிகள் பிரிவு, அதிகமாக மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கான சிறப்புப் பிரிவு என தனித்தனியாகப் பிரித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50-லிருந்து 80 போ் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும் நோயாளிகள், உடனடியாக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். ஓரளவு குணமடைந்தவா்கள், வேப்பூரில் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனா்.

கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவத் தொடங்கியதும், மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை ஆகிய துறைகள் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டன. கரோனாவின் தாக்கம் குடியாத்தம் பகுதியில் அதிகரித்து வருவதால், மாவட்ட ஆட்சியா் தலைமையில், பல்துறை அதிகாரிகள் குழு கடந்த வெள்ளிக்கிழமை குடியாத்தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நகரில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள 15 தெருக்கள் அடைக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில், தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. எனினும், பொதுமக்கள் அரசு விதிகளைப் பின்பற்றாமலும், தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

பொதுமுடக்க விதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே குடியாத்தம் பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தவிா்க்க முடியும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments