ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ
ஷிர்பூர் வங்கியின் உரிமத்தைச் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மும்பை: 'தி ஷிர்பூர் கூட்டுறவு வங்கி' செயல்பாடுகளுக்கு போதுமான நிதி மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்காத காரணத்தினால், வாடிக்கையாளர்கள் நலன் கருதி வங்கியின் உரிமத்தைச் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.
இதன் விளைவாக, ஏப்ரல் 6, 2026 அன்று வணிக நேரம் முடிவடைந்ததிலிருந்து, 'தி ஷிர்பூர் கூட்டுறவு வங்கி' தனது செயல்பாடுகளை மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ளும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கியைக் கலைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், அதற்கான லிக்விடேட்டர் அதிகாரியை நியமிக்குமாறும் மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
வங்கி கலைக்கப்படும் பட்சத்தில், ஒவ்வொரு வைப்பாளரும் தங்கள் வைப்புத்தொகையில் ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து (DICGC) காப்பீட்டுத் தொகையாகப் பெறத் தகுதியுடையவராவர்.
உரிமம் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, 'தி ஷிர்பூர் கூட்டுறவு வங்கி' வங்கிச் சார்ந்த வணிகங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.