கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி. மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன் என ராகுல் காந்தி பேசியது குறித்து...
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி. மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன் என காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கேரளம் உள்பட தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக, கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கியுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
Advertisement
இந்த நிலையில் கேரளம், பாலக்காடு மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நான் பாஜகவுக்கு எதிராக போராடுகிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். அமலாக்கத் துறையால் 55 மணி நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன். பிறகு, ஜாமீனில் வெளிவந்தேன்.
எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் பாஜகவின் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் முக்கிய இலக்காக நான் இருந்தேன். பாஜக, கேரள முதல்வரைக் குறி வைக்ககாதது ஏன்? அவரிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் எந்தவித விசாரணையையும் நடத்தாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம், ஏப்ரல் 7, 2026 அன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.