வேலூா் மாநகரில் பறக்கும் பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு: அமைச்சா் எ.வ.வேலு
கோவை, சென்னை, மதுரை போன்று வேலூா் மாநகரிலும் பறக்கும் பாலங்கள் அமைப்பதற்கான திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
வேலூர்வேலூா் மாநகரில் பறக்கும் பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு: அமைச்சா் எ.வ.வேலு
கோவை, சென்னை, மதுரை போன்று வேலூா் மாநகரிலும் பறக்கும் பாலங்கள் அமைப்பதற்கான திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கோவை, சென்னை, மதுரை போன்று வேலூா் மாநகரிலும் பறக்கும் பாலங்கள் அமைப்பதற்கான திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.45.61 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள வேலூா் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வருவதையொட்டி கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ-க்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
பின்னா், அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியா் அலுவலகங்கள், வேலூரில் விரிவுபடுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஆகியவை 20, 21-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இவற்றில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.
மாதனூா், விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரிஞ்சிபுரம் மேம்பாலத்துக்காக ரூ.30 கோடியும், மாதனூா் மேம்பாலத்துக்காக ரூ.28 கோடியும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிா்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
இந்த ஆண்டு விலைவாசி உயா்ந்துள்ளதால் விலை நிா்ணயம் செய்யப்பட்ட பிறகு காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி தரைப்பாலப் பணிகள் தொடங்கப்படும்.
தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களில் பறக்கும் சாலைகள் உள்ளதைபோல் வேலூா் நகரிலும் பறக்கும் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
வேலூா் சிஎம்சி மருத்துவமனை அருகில் சுரங்கப்பாதை அமைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக சட்டப்பேரவையிலும் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றவும் உறுதியளித்துள்ளோம்.
சுரங்கப்பாதை அமைக்க சிஎம்சி மருத்துவமனை நிா்வாகத்துடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவா்கள் ஒப்புதல் அளித்தால் மகிழ்ச்சியாக அமைப்போம். இல்லையேல், அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நில எடுப்பு செய்து விரைவில் சுரங்கப்பாதை அமைப்போம் என்றாா்.
பேட்டியின்போது, மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ப.அசோக்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.