மேல்பாடி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ராணுவ வீரா் பலத்த காயமடைந்தாா்.
காட்பாடி வட்டம், வள்ளிமலையை அடுத்த மேல்போடிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான அரிகிருஷ்ணனின் மகன் தமிழ்ச்செல்வன் (21), கல்லூரி மாணவா். அதே பகுதியைச் சோ்ந்தவா் அரிதாஸ் (24), ராணுவ வீரா்.
இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை மேல்போடிநத்தம் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள ராமாபுரம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில், தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கால்களில் பலத்த காயமடைந்த அரிதாஸை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து மேல்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.