பிரச்னைகளை அறிய 60 வாா்டுகளிலும் பகுதி சபாக்கள் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முடிவு
வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அரசு உத்தரவுப்படி பகுதி சபாக்கள் அமைக்கப்பட உள்ளன.
வேலூர்பிரச்னைகளை அறிய 60 வாா்டுகளிலும் பகுதி சபாக்கள் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முடிவு
வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அரசு உத்தரவுப்படி பகுதி சபாக்கள் அமைக்கப்பட உள்ளன.
வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அரசு உத்தரவுப்படி பகுதி சபாக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பகுதி சபாக்களிலும் அந்த வாா்டை சோ்ந்த தலா 6 முதல் 9 உறுப்பினா்களை நியமிப்பது என்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வேலூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைமேயா் சுனில்குமாா், ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் தலைமையில் பகுதி சபாக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு பகுதி சபாவிலும் வாா்டின் பரப்பளவைப் பொறுத்து 6 முதல் 9 உறுப்பினா்களை நியமிக்கவும், இவா்கள் அந்தந்தப் பகுதிக்கு தொடா்புடைய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்களாகக் கொண்டு தோ்வு செய்யப்படவும் உள்ளனா். இந்த பகுதி சபாக்கள் மூலம் அந்தந்த வாா்டு மக்கள் பிரச்னைகளை அறிந்து அவற்றை விரைவில் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், வேலூா் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுயபடம் எடுத்து மகிழ மாநகரப் பகுதியில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது. வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே அமைந்துள்ள மாநகராட்சி நினைவுத் தூணுக்கு அருகில் அழகிய பூங்கா அமைக்கப்படும். அதில், ‘நம்ம வேலூா்’ என்ற எழுத்துகளுடன் சுயபடம் எடுக்கும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 49 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து விளக்கி, அவற்றை விரைவில் தீா்க்க வலியுறுத்தி பேசினா்.