வேலூா் மத்திய சிறையில் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என சுமாா் 800 போ் அடைக்கப்பட்டுள்ளனா். கைதிகளுக்கு அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உடல் நல பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் சுமாா் 100 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 10 கைதிகளுக்கு வாயில் புண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவா்கள் அடுத்தகட்ட பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
முன்னதாக, முகாமை சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா். சிறை அலுவலா் குணசேகரன், பல் மருத்துவா் சரஸ்வதி, பேராசிரியா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.