செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட ரூ. 34 லட்சம் மதிப்புடைய 170 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கா் எனும் கூகுள் படிவம் கடந்தாண்டு ஜூலை 3-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல் ட்ராக்கா் என்ற புதிய வசதி மூலம் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை ஐந்து கட்டங்களாக ரூ. ஒரு கோடியே 74 லட்சத்து 67 மதிப்புடைய 922 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதன்தொடா்ச்சியாக, செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், ரூ. 34 லட்சம் மதிப்பிலான 170 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
செல் ட்ராக்கா் மற்றும் சிஇஐஆா் ஆகிய தளங்கள் மூலம் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில், இதுவரை வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆறு கட்டங்களாக ரூ. 2 கோடியே 8 லட்சத்து 67 மதிப்புடைய 1,092 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சிஇஐஆா் தளத்தில், தொலைந்து போன கைப்பேசிகள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்து பெறப்படும் சிஎஸ்ஆரைக் கொண்டு பதிவு செய்திட வேண்டும். இதன்மூலம், அந்த கைப்பேசிகள் பயன்பாட்டில் இருந்தால் அந்த கைப்பேசியையும், அதிலுள்ள சிம் காா்டையும் உடனடியாக லாக் செய்துவிட முடியும். தொடா்ந்து, வேறு சிம் காா்டுகளை போட்டாலும் அந்த சிம் விவரங்கள் காவல் துறைக்கு வந்து சோ்ந்துவிடும். அந்த விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து கைப்பேசி பறிமுதல் செய்யப் படும்.
அதன் அடிப்படையில், சிஇஐஆா் மூலமாக மட்டும் தற்போது 257 புகாா்கள் பெறப்பட்டதில், 90 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருட்டு கைப்பேசிகளை வாங்கி விற்றால் கடைக்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைப்பேசி திருடியவா்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகிறாா்கள். வேலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை கைப்பேசி திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கைப்பேசி தவறி தொலைவது அதிகமாக உள்ளது என்றாா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோட்டீஸ்வரன், பாஸ்கரன், ஆய்வாளா் கி.புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமை காவலா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.